நகை வாங்க முடியாது.. மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!.. ஒரு சவரன் ரூ. 344 உயர்ந்து ரூ.38,168க்கு விற்பனை..


நகை வாங்க முடியாது.. மீண்டும் உயர்ந்தது தங்கம் விலை!.. ஒரு சவரன் ரூ. 344 உயர்ந்து ரூ.38,168க்கு விற்பனை..


சென்னை: சர்வதேச நிலவரத்துக்கு ஏற்ப தங்கம் விலை அவ்வப்போது ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இருப்பினும், அட்சய திருதியை தொடர்ந்து இந்த மாத துவக்கத்திலேயே தங்கம் விலை அதிரடியாக சரிந்தது. பின்னர் 2 நாட்களுக்கு ஏற்றம் அடைந்தாலும், பெரும்பாலான நாட்களில் தங்கம் விலை குறைந்து வந்தது. சென்னையில், கடந்த 13ம் தேதி ஒரே நாளில் ஆபரண தங்கம் சவரனுக்கு ரூ.544 சரிந்தது. 14ம் தேதி ரூ.144 குறைந்து, சவரன் ரூ.37,896க்கு விற்கப்பட்டது. நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் விலையில் மாற்றமில்லை. நேற்று மாலை வர்த்தக முடிவில் தங்கம் சவரனுக்கு ரூ.72 குறைந்து, ரூ.37,824க்கு விற்பனையானது. நேற்றுடன் சேர்த்து தொடர்ந்து 3 நாட்களில் தங்கம் சவரனுக்கு ரூ.760 குறைந்தது.

இந்த நிலையில், சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.344 உயர்ந்து, ரூ.38,168-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போல ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.43 உயர்ந்து, ரூ.4,771-க்கு விற்பனையாகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து, ரூ.65.40க்கு விற்கப்படுகிறது. இதற்கு மத்தியில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவில் சரிந்துள்ளது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மாற்று மதிப்பு 14 காசுகள் குறைந்து 77.69 ஆக சரிந்துள்ளது.

Comments